Wednesday, November 18, 2009

Monday, September 28, 2009

உலக மொழிகளில் தமிழுக்கு...

உலகில் இன்று பேசும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ் மொழி 15ஆவது இடத்தில் இருப்பதாக மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவைப் பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.
1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமைப் பிரகடனத்தின்படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன.
ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.
இந்நிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் மொழி 15 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்குப்பகுதி, மற்றும் 1862 ஆம் ஆண்டு பிரிட்டன் காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது.
தமிழ் மொழிக்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன.
இவற்றை 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்கமுடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Wednesday, September 09, 2009

சிறிய இடைவெளிக்குப் பின்னர்.....

சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ் ஆய்வுத் தலைப்பு வழி உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பல சுவையான தகவல்களை பரிமாறிக் கொள்வோம்.

Friday, June 16, 2006

திருக்குறள் உலகப் பொதுமறை


வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)

சாதி, மதம், இனம், மொழி நாடு என்ற எல்லைகளைத் தாண்டி அனைத்து நாடுகளில் உள்ளவர்களுக்கும் அனைத்து மொழியினருக்கும் உரிய பொதுவான உயர்ந்த அறக்கருத்ததுகளைக் கூறும் நூல் திருக்குறள் ஆகும். எக்காலத்துக்கும் ஏற்ற கருத்துகளையும் திருக்குறள் முன் வைக்கிறது. காலம் கடந்து, மொழி, இனம், நாடு, சாதி, மதம் கடந்து உலகளாவிய நிலையில் மனித குலத்திற்கு வழிகாட்டும் வள்ளுவம் உலகப் பொதுமறையாகும். வாழ்வுக்கு இலக்கணமாகவும் மொழிக்கு இலக்கியமாகவும் உள்ள இந்நூலை எல்லா நாட்டவரும் எல்லா மொழியினரும் தத்தம் மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டுள்ளனர்.

தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் தோன்றிய இந்நூலை முதற்கண் தமிழர்களும் அடுத்ததாக இந்தியத் தேசிய நடுவண் அரசும் இதனை உலகுக்கு முறையாக அறிவிக்கக் கடமைப்பட்டவர்கள். இந்திய அரசு திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சட்டசபையும் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. நல்லறிஞர்களும் பொது நிலையாளர்களும் இதனை வெகு ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். எனவே நடுவன் அரசு திருக்குறளைத் தேசிய நூலாக ஏற்று அறிவிப்பு செய்ய வேண்டும்.

Friday, March 17, 2006

என்னுரை



கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ!

அன்பார்ந்த ஆய்வாளர்களே! வணக்கம். இவ்விதழ் ஆய்வியலை வளர்க்கத் தோன்றியதாகும். தமிழியலில் ஆய்வுத்துறை வளர்ந்து கொண்டே உள்ளது. அவ்வளர்ச்சி அவ்வப்போது தமிழியலார்க்குக் கிடைக்க வேண்டும். ஆய்வாளர்களுக்கு உரிய தரவுகளும் ஆவணங்களும் கிடைக்க வேண்டும். ஆய்வாளர்கள் எனும்போது ஆசிரியப் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் அடங்குவர்.

தமிழ் மொழிபற்றிய துறை தமிழ்த்துறை என்றில்லாமல் தமிழிலக்கியம் பற்றிய துறை என்பதான எண்ணம் வரக்காரணம் தனியே மொழியியல் என்ற துறை மிக விரைவாக வளர்ந்ததுதான். ஆனால் இதே போல வளர்ந்த இதழியல், சுற்றுலாவியல் முதலிய துறைகளும் தமிழோடு தொடர்புடையன என்பதைத் தமிழ்த்துறையினர் உணர்ந்ததால் தமிழியல் துறை ஆயிற்று.

தமிழ் படிக்கும் மாணவர்களும் தமிழ் ஆசிரியர்களும் இன்றைக்கு வளர்ந்துவரும் துறைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தமிழறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியன், வ.அய். சுப்பிரமணியன், மா.நன்னன், க.ப.அறவாணன், பொற்கோ, வா.செ.குழந்தை சாமி முதலியோர் வலியுறுத்துவர்.
தமிழ் என்றால் இனிமை என்று பொருள் தரும். காதல் என்றும் பொருள் தரும். தமிழ் என்னும் சொல்லைத் தமிழ் மொழியைக் குறிக்கவும், தமிழ் நாட்டைக் குறிக்கவும், தமிழ் இனத்தைக் குறிக்கவும், சங்ககாலம் முதலே வழங்கி வருகின்றனர். எனவே தமிழியல் என்பதில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் என்பவை மட்டுமல்லாமல் தமிழ் மொழியையும் நாட்டையும் இனத்தையும் சார்ந்த வரலாறு, நாகரிகம், பண்பாடு, இதழியல், மொழியியல், சுற்றுலாவியல், சமயவியல், மெய்மையியல், கலையியல், (ஓவியம், சிற்பம், கட்டடம், இசை, நாடகம், திரைப்படம் முதலியன) போன்ற அனைத்துமே உள்ளடக்கம்தான்.

தமிழில் நான்காம் தமிழாக அறிவியல் தமிழைச் சேர்க்க வேண்டும் என்று முனைவர் ந.சஞ்சீவி கூறினார். அறிவியல், அறவியல் என அனைத்தையும் இயல்தமிழ் கொண்டதுதான். இன்று வளர்ந்துவரும் கணிப்பொறியியலும் இதிலடங்கியதுதான். இத்துறையையும் உலகம் முழுவதும் வளர்த்து வருவது நம் தமிழ் இளைஞர்கள்தான். இணையத்திலும் ஆங்கில மொழியை அடுத்து தமிழே அதிக அளவில் இடம் பெற்றுவருகின்றது.

இவ்வாறு மிகவிரைவாகப் பல துறைகளிலும் பல திக்குகளிலும் பல வகைகளிலும் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்ற தமிழை – தமிழியலின் ஆழ அகல உயர்வு நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையான ஆசிரியரின் ஆய்வாளரின் கடமை. இதற்கு உதவுவதற்காகவே இவ்விதழ் தொடங்கப் பெறுகின்றது.

ஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கும் போது சந்திக்கின்ற முதல் சிக்கல் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதுதே. ஆய்வுக்களத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது, இனி என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலிருந்தும் தலைப்புகைளத் தொகுத்து முனைவர் தமிழண்ணல் ஓரு நூல் வெளியிட்டுப் பல ஆண்டுகளாயிற்று. அடுத்து நிகழ்ந்த ஆய்வுகளின் தலைப்புகளை இன்றுவரை தொகுத்தும் நிறைவடையவில்லை. ஆய்வில் நிறைவில்லை என்பது உண்மை.

எனினும் முடிந்தவரை-மிக அதிகமான உழைப்பின் இறுதி எல்லையில் இயன்ற அளவிலான அதிகப்படியான நிறைவை அடைந்துதான் தீரவேண்டும். அதற்குக் கூட்டு முயற்சி தேவை. அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள தமிழ்த்துறைத் தலைவர்கள் தாங்களாக மனமுவந்து இப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறோம். தாங்கள் பல பணிகளுக்கிடையே இதனையும் ஆய்வுக் கடமையாகவும் தமிழ் மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டாகவும் கருதி ஈடுபட அழைக்கின்றோம்.

கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறைத் தலைவர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர்களும் தமிழன்பர்களும் தனிப்பட்ட ஆய்வாளர்களும் இதழியல் துறையிலிருந்தும் பதிப்புத் துறையிலிருந்தும் கணிப்பொறித் துறையிலிருந்தும் பிற துறைகளிலிருந்தும் தமிழ்ப்பணி செய்வோரும் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம். உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உடனடியான உங்கள் பங்கேற்பு மடலைத்தான்.

முனைவர்.பா.இறையரசன்.