Friday, June 16, 2006

திருக்குறள் உலகப் பொதுமறை


வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)

சாதி, மதம், இனம், மொழி நாடு என்ற எல்லைகளைத் தாண்டி அனைத்து நாடுகளில் உள்ளவர்களுக்கும் அனைத்து மொழியினருக்கும் உரிய பொதுவான உயர்ந்த அறக்கருத்ததுகளைக் கூறும் நூல் திருக்குறள் ஆகும். எக்காலத்துக்கும் ஏற்ற கருத்துகளையும் திருக்குறள் முன் வைக்கிறது. காலம் கடந்து, மொழி, இனம், நாடு, சாதி, மதம் கடந்து உலகளாவிய நிலையில் மனித குலத்திற்கு வழிகாட்டும் வள்ளுவம் உலகப் பொதுமறையாகும். வாழ்வுக்கு இலக்கணமாகவும் மொழிக்கு இலக்கியமாகவும் உள்ள இந்நூலை எல்லா நாட்டவரும் எல்லா மொழியினரும் தத்தம் மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டுள்ளனர்.

தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் தோன்றிய இந்நூலை முதற்கண் தமிழர்களும் அடுத்ததாக இந்தியத் தேசிய நடுவண் அரசும் இதனை உலகுக்கு முறையாக அறிவிக்கக் கடமைப்பட்டவர்கள். இந்திய அரசு திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சட்டசபையும் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. நல்லறிஞர்களும் பொது நிலையாளர்களும் இதனை வெகு ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். எனவே நடுவன் அரசு திருக்குறளைத் தேசிய நூலாக ஏற்று அறிவிப்பு செய்ய வேண்டும்.